Sunday, September 16, 2012

இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை!

தமிழ் நாட்டுல மக்களை முட்டாள் என்று நினைத்து விட்டார் போலிருக்கு தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. ஒன்னும் உருப்படியா செய்ய தெரியாது இவருக்கு. தன் மக்கள் நலனுக்காக ஒட்டு மொத்த தமிழர் நலனை அடகு வைப்பதை விட இவர் பொது வாழ்வில் சாதித்தது ஒன்றும் இல்லை. இந்த லட்சணத்தில் நேற்று (15/09/2012) விழுப்புரத்தில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டத்தில் முழங்கோ முழங்கு என்று முழங்கி இருக்கிறார். அவர் முழங்கியவற்றுள் நமக்கு சிரிப்பை வரவழைத்த இரண்டு முழக்கங்களை இங்கே காணலாம்.

முழக்கம் 1. கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்காமல், முன்பு ஆதரவாக தீர்மானம் போட்ட ஜெயலலிதா, இப்போது துப்பாக்கி கொண்டு தாக்குகிறார்:

இந்த முழக்கத்தின் மூலமாக இவர் தமிழகத்தில் தான் இருக்கிறாரா? என்கிற ஐயம் எழுகிறது. முன்பு ஜெயலலிதா மக்களின் அச்சத்தை போக்கும் வரை கூடங்குளம் அணுவுலை திட்டத்தை தள்ளி வைக்க சொன்னார். அவர் கருத்தை ஏற்று மத்திய அரசு குழு அமைத்து சம்மந்த பட்ட மக்களை அழைத்து பேசியது. மாநில அரசும் குழு அமைத்து சமாதானம் பேசியது. இதையெல்லாம் தள்ளிவிட்டு போராட்டக்காரர்கள் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என்று சென்று தோல்வி அடைந்தவர்கள் முற்றுகை என்கிற பேரில் அணுவுலையை அணுகினால் அதைப் பார்த்து பொறுப்புள்ள மாநில அரசு சும்மா இருக்க முடியுமா? அவர்களை கலைக்க பலப்பிரயோகம் செய்ய வேண்டி வந்தால் அதையும் செய்ய வேண்டியதுதான். அதைத்தான் மாநில அரசு செய்தது. அவர்களுடன் பேச்சு வார்த்தை என்று மீண்டும் முதல் அத்தியாயத்தில் இருந்து ஆரம்பிக்க முடியாது. கருணாநிதி சொல்வது போல அவர்கள் மீது பலப்பிரயோகம் செய்யாமல் இருந்து அவர்களால் அணுவுலைக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திருந்தால் இந்நேரம் இந்த பெரிய மனிதர் கையாலாகத அரசு என்று மாநில அரசை சாடியிருப்பார். தமிழக மக்கள் மத்தியில் ஜெயலலிதா பெயரும் கேட்டிருக்கும். அவ்வாறு நேர வில்லை என்கிற ஆதங்கத்தில் இப்படி முழங்கி இருக்கிறார். இதில் ஜெயலலிதாவை குறை கூறும் இவர் திராணி இருந்தால் சோனியாவின் சர்க்காரையும் குறை கூற வேண்டியதுதானே. அவ்வளவு அளவுக்கு உடலில் பயத்தை வைத்துக்கொண்டு முழக்கம் எதற்கு?

முழக்கம் 2. தம்பி மார்களை தட்டிவிட்டால் தமிழகம் ரகளை காலமாக ஆகிவிடும் என்பதால் தன்மானம் பற்றிய  ஜெயலலிதாவின் கருத்துக்கு பதில் சொல்ல விரும்ப வில்லை:

அதுவல்ல உண்மை. காரணம் பலவுண்டு. முன்பு போல தம்பிமார் யாரும் தட்டிவிட்டால் உடனே களத்தில் இறங்குவதில்லை. ஏதோ வயசான காலத்தில் புலம்புகிறார் என்று எண்ணி அவரவர் வருமனாத்தை பார்க்கிறார்கள். வழக்கு, ஜெயில் என்று வந்தால் செலவு செய்ய வேண்டாமா? தலைவர் வேறு முன்பே அவரவர் வழக்கை அவரவரே பார்த்துக்கொள வேண்டும் என்று வேறு கூறிவிட்டார். இந்நிலையில் ரகளை பண்ண எவன் வருவான்? அப்படியும் தப்பித் தவறி வந்தாலும் ஜெயலலிதா சும்மா இருக்க மாட்டார். ஏற்கெனவே ஜெயலலிதாவிடம் பட்ட அனுபவம் பல தம்பிகளுக்கு இருக்கிறது. இதுதான் உண்மை.

மேலும் தன்மானம் அற்றவர் தனக்கு தன்மானம் உள்ளது என்பதை நிரூபிக்க பதில் கூறவா முடியும். இப்படி வடிவேலு  மாதிரி வேண்டாம் வலிக்குது என்கிற ரீதியில்தான் முழங்க முடியும். தன்மானம் என்று ஒன்று இருந்திருந்தால் இவர், இலங்கைத் தமிழர்கள் மீது மத்திய சர்க்கார் ஆசியுடன் இலங்கை அரசு செய்த தாக்குதலை கண்டித்து ராஜினாமா செய்திருக்க வேண்டாம், குறைந்த பட்சம் தனது மகளை தனது ஆதரவுடன் நடக்கும் மத்திய அரசு கைது செய்ததே அப்போதாவது ராஜினாமா செய்திருப்பார். இது ஒரு நிகழ்ச்சி போதாதா தன்மானத்தை நிரூபிக்க.

இந்த தமாசுகளை நினைத்து சிரியோ சிறி என்று தமிழகம் அல்ல அனைத்து இந்தியாவே சிரிக்கிறது. 

Saturday, August 25, 2012

இலங்கைத் தமிழருக்காக ஆட்சியை இழந்தாராமாம்!

இலங்கைத் தமிழருக்காக ஆட்சியை இரண்டு முறை ஆட்சியை இழந்தாராமாம் திரு. மு. கருணாநிதி! இதை பொது மேடையில் முழங்கி இருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். நேற்று (24/08/2012) அம்பத்தூரில் நடைபெற்ற டெசோ விளக்க பொதுக்கூட்டத்தில்தான் இப்படி முழங்கி இருக்கிறார்கள். ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே இலக்கிற்காக இலங்கை தமிழர்களுக்கு தங்களால் ஆனா அனைத்து துரோகங்களையும் செய்து விட்டு இன்று அதை மூடி மறைக்க பிரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள். ஆனால் என்ன செய்வது மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்களே?

ஆட்சியை இரண்டு முறை இவர்கள் இழந்தது இலங்கை தமிழருக்காக அல்ல? அது வேறு காரணங்களுக்காக என்பது சிறு குழந்தைக்கு கூட தெரிந்த விஷயம். திமுக ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. 1975 இல் ஊழல் குற்றச்சாட்டிற்காக மிசா சட்டத்தின் கீழ் அன்னை இந்திரா காந்தி அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அப்போது இலங்கை தமிழர் பிரச்சனை நம் மாநிலத்தை தொட வில்லை. பிறகு 1991 இல் சந்திர சேகர் பிரதமராக இருந்த பொது மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது இந்திய அரசு ரகசியங்களை கள்ளத்தனமாக விடுதலை புலிகளுக்கு அனுப்பிய தேச துரோக குற்றத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆக இரண்டு முறையும் நாட்டு நலனுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியதற்காகதான் இவர்கள் ஆட்சியை பறி கொடுத்தார்களே அன்றி, இலங்கை தமிழன் அல்ல இந்திய தமிழன் நலனுக்காக கூட ஆட்சியை பறிகொடுக்க இவர்கள் தயார் இல்லை. 

மேலும் ராஜீவ் காந்தி படுகொலையில் திமுகவிற்கும் தொடர்பு இருப்பதாக ஜெயின் கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி 1997 இல் அன்றைய ஐக்கிய முன்னணி சர்காரிலிருந்து திமுகவை வெளியேற்ற வேண்டும் என்று காங்கிரசு வற்புறுத்தியும் வெளியேறாமல் அதற்காக திரு. குஜ்ரால் தலைமையிலான  ஐக்கிய முன்னணி ஆட்சியே பறி போயிற்று. ஆனால் அதே காங்கிரசுடன் 2004 இல் கூட்டணி வைத்து அவர்கள் தலைமையிலேயே ஆட்சியில் இடம் பிடித்த இவர்கள் பேசுவதெல்லாம் நமக்கு வேத வாக்கு ஆகிவிடுமா என்ன? வெறும் காமிடி பீசு தான்! 

இதில் ஹைலைட் என்ன என்றால், டெசோ தீர்மானத்தை ஐ.நா. சபைக்கு அனுப்பி ஏற்க செய்வார்களாம்! வலிமை வாய்ந்த ஜனநாயக நாடுகள் போடும் தீர்மானத்தையே ஐ.நா. சபை காது கொடுத்து கேட்பதில்லை. அப்படி இருந்திருந்தால் என்றோ பாகிஸ்தான் நமக்கு கொடுத்து வரும் தொல்லைகள் அடங்கியிருக்கும். இந்த லட்சணத்தில் காமிடி பீசுகள் கொடுக்கும் தீர்மனத்தையா அங்கீகரிக்க போகிறார்கள். கவுண்டமணி ஸ்டைலில் "ஜப்பான்ல ஜாக்கி சான் கேட்டாங்கோ, அமெரிக்கவுல மைக்கேல் ஜாக்சன் கேட்டாங்கோ" என்று வேண்டுமானால் அறிக்கை விட்டுக்கொள்ள பயன்படுமே அன்றி ஊறுகாய் மடிக்க கூட உதவாது! 

Monday, October 31, 2011

எப்படித்தான் எண்றாங்களோ!

இன்றையதினம் (31/10/2011) உலகின் எழுநூறாவது கோடி குழந்தை, நர்கிஸ் உ.பி. தலைநகர் லக்னோவை சார்ந்த வினிதா-அஜய் தம்பதியினருக்கு பிறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஒரு நிமித்தமான (Symbolic) அறிவிப்புத்தான் என்றாலும், இத்தகைய செய்திகளை கேட்கும் பொழுது நமக்கு சிரிப்புத்தான் வருகிறது. 

இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதுவும் ஒரு ஆண்டு காலம் நடக்கிறது. இதில் நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் யார் முதலில் யார் கடைசியில் என்ற பேச்சுக்கே இடமில்லை. குடியரசுத்தலைவருக்கு மட்டும் தான் நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்து உள்ளது. ஆனால் கடைசி குடிமகன் என்று யாரும் இல்லை, அப்படி யாரையும் குறிப்பிடுவது கிடையாது. மேலும் இந்த கணக்கெடுப்பு முறையே சரிவர நடத்தப்படுவதில்லை. சில வீடுகளை, தெருக்களை, விட்டுவிட்டுதான் இந்த கணக்கெடுப்பு பணியே அரைகுறையாக செய்கிறார்கள். மேலும் சமீப சில ஆண்டுகள் வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பே நடத்தாமல் இருந்தார்கள். 

ஏதோ ஒரு கணக்கீட்டின் அடிப்படையில் ஒரு நிமிடத்திற்கு இந்தியாவில் இத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்று சொல்கிறார்கள். அதில் எந்த குழந்தை எத்தனையாவது என்று யாரும் தேடி கண்டு பிடிப்பதில்லை. பொத்தம் பொதுவாக சொல்வதுதான். இப்படிப்பட்ட நிலையில் லக்னோவை சார்ந்த இந்த குழந்தைதான் எழுநூறாவது கோடி என்று எப்படித்தான் சொல்கிறார்களோ? இதை நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டுமாம். இதில் என்ன பகுத்தறிவு உள்ளதோ? எது எப்படியோ அந்த குழந்தை ஒரு ஸ்டார் அந்தஸ்தை பெற்றுவிட்டது. "நர்கிஸ் நூறாண்டு காலம் வாழ்க" 

Saturday, October 29, 2011

மாதம் மும்மாரி பொழிகிறதா?

நம்முடைய பாரம்பரிய தெருக்கூத்து நாடகங்களில் மன்னர் மந்திரி பிரதானிகளை பார்த்து கேட்கும் கேள்வி "அமைச்சரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?" மந்திரியாரும் "ஆம் அரசே! பொழிகிறது" என்பார். கேட்க விந்தையாக இருக்கும். ஆயினும் மக்களுக்கு அரசர், மந்திரி போன்ற பாத்திரங்களை அறிமுக படுத்த இத்தகைய வசனங்கள் இடம் பெறுவது சகஜம். ஆனால் அதே வசனங்கள் நடை முறையில் இடம் பெற்றால், நம்மை பார்த்து பிறர் எள்ளி நகையாடுவார்கள். அவற்றை பொருட்படுத்தாமல் இருந்தால், அவர்கள் வடிகட்டிய அரசியல்வாதிகள். அதையும் பொருட்படுத்துபவன் வடிகட்டிய இளிச்சவாயன். ஆம் ஓட்டு போடும் இயந்திரங்களாகிய நம்மைத்தான் சொல்கிறேன். அப்படிப்பட்ட நகைச்சுவை வசனங்களை கேட்கும் பாக்கியம் எனக்கு ஏற்பட்டது. 

இன்று (29/10/2011) செய்தி தொலைக்காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்த பொழுது "Star News" தொலைக்கட்சியில் இடம் பெற்ற செய்தியாவது: உணவு மந்திரி திரு. கே. வி. தாமஸ், காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியை சந்தித்தார். அப்பொழுது விலைவாசி ஏற்றத்திற்கான காரணங்கள் என்ன என்று சோனியா கேட்டார். விலைவாசி உயர்விற்கு பல காரணங்கள் இருப்பதாக மந்திரி சொன்னதுடன் அவற்றை பட்டியலிட்டார். சரி! விலைவாசி உயர்வை விரைவில் கட்டுக்குள் கொண்டுவாருங்கள் என்று சோனியா மந்திரியை கேட்டுக்கொண்டார் என்று முடிந்தது செய்தி. கேட்டதும் பழைய நாடக பாணி வசனங்கள் தான் மனத்திரையில் ஓடியது. 

இவர்கள் நம்மை முட்டாள், மூடன், மடையன், சாம்பிராணி, ஜடம், இளிச்ச வாயன்கள் என்று முடிவு கட்டி விட்டார்கள். கோபாலா! ஏன் சார். எங்கே போரே? கடைக்குப்போறேன். என்கிற பாணியில் வசனங்களை அடுக்குகிறார்கள். விலைவாசி உயர்கிறது, அதற்கு என்ன கரணம், அதை வரம்பிற்குள் கொண்டுவர கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்கிற எந்த ஒரு தகவலும் அம்மையாருக்கு தெரியாது பாருங்கள்! மந்திரியை கேட்டுத்தான் தெரிய வேண்டும். இந்த லக்ஷணத்தில் அவர் தேசிய பாதுகாப்பு கூட்டத்தின் தலைவி வேறு. சமீபத்தில்தான் நிதி அமைச்சர் விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைப்பதுதான் எப்படி என்பது தெரியவில்லை என்று வெளிப்படையாகவே அங்கலாய்த்தார். பிரதம மந்திரி என்கிற புண்ணியவான் பரவாயில்லை. அவர் ஏதோ பாகிஸ்தானுக்கோ, அமெரிக்காவுக்கோதான் தாம் பிரதமர் என்பது போல  இந்நாட்டை பீடித்திருக்கும் பிரச்சனைகள் குறித்து அவ்வப்பொழுது கவலை தெரிவிப்பதோடு சரி. மற்றபடி அம்மையார் போல வசனங்களை அடுக்க மாட்டார். 

என்ன செய்வது இவர்கள் எல்லாம் நம்மை ஆள்பவர்கள். லாலு சொன்னது போல தெய்வம்தான் வண்டியை ஒட்டிக்கொண்டிருக்கிறது.      

Monday, October 24, 2011

வடி(யா)வேலு!

தமிழர்கள் உணர்வு பூர்வமானவர்கள் (Sentimental) மற்றும் நகைச்சுவை (Jovial) மிக்கவர்கள். நான்கு பேர் ஒன்று கூடி பேச நேர்ந்தால் அரட்டை அடிப்பது இயல்பான ஒன்று. அதிலும் நகைச்சுவை எண்ணத்தை வெளிப்படுத்தாத அரட்டைகளே இருக்க முடியாது. அலுவலகங்கள், வீடுகள், தெருமுனைகள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள் என்று எங்கு பார்த்தாலும் கிண்டல், கேலி, என்று பேச்சில்லாத இடங்களே இருக்க முடியாது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று சகலரும் ரசிப்பது இந்த நகைச்சுவை கெலாட்டக்களைத்தான். அப்பா அம்மாவையும், அம்மா, மாமியாரையும், அத்தை, மாமன்களையும், பிள்ளைகள் ஆசிரியர்களையும் வைத்து செய்யும் கெலாட்டக்கள் சொல்லி மாளாதவை. செய்தி, திரைப்படம், பாட்டு என்று பல இருந்தாலும் நகைச்சுவை தொலைக்கட்சிக்களை பாராத இல்லங்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு நகைச்சுவை உணர்வு தமிழர்கள் வாழ்வுடன் பின்னி பிணைந்தது. தெருக்கூத்துக்கலையானாலும் அங்கே ஒரு பபூன் இருப்பான். திரைப்படங்களில் நாகேஷ், தங்கவேலு, கருணாநிதி, பாலையா, காளை என். ரத்தினம், சந்திரபாபு, மனோரமா, முத்துலட்சுமி, சச்சு, உசிலைமணி, கவுண்டமணி, செந்தில், ஜனகாராஜ், எஸ்.வி. சேகர், லூசு மற்றும் கிரேசி மோகன்கள், கோவை சரளா, விவேக், சந்தானம், மற்றும் பெயர் மறந்துபோன சிலபேர் என்று ஒரு நீண்ட பட்டியலே தமிழர்கள் வசம் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு தொன்மையான பாரம்பரியத்தில் சமீபத்திய தமிழர்களை மிகவே ஆராதித்தவர் வடிவேலு ஆவார். இவர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டார். போற்றப்பட்டார். அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இரண்டற கலந்து என்னும் அளவிற்கு ரசிக்கப்பட்டார். 

பேச்சு பேச்சா இருக்கட்டும், வானா வலிக்குது, ஹய்யோ ஹய்யோ, வரும் வராது, மாப்பு வெச்சுட்டாண்டா ஆப்பு, என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு, வட போச்சே, சிங் இந்த ரெயின், கடுப்பேத்தறார் மை லார்ட், போன்று எத்தனையோ வார்த்தைகள் இன்று அன்றாடம் மக்கள் நடுவில் கையாளப்படுகின்றன. அந்த அளவிற்கு மக்கள் அவரை பெரிதும் விரும்பினார்கள். எத்தனையோ நடிகர்கள் தோன்றி மறைந்தாலும், பல பிரபலங்கள் நகைச்சுவை படையலே இட்டிருந்தாலும், வடிவேலுவை மக்கள் உள்ளத்தில் ஏந்தியது போல வேறு எந்த கலைஞனுக்கும் இத்தகைய பதவியை தந்ததில்லை. கதாநாயக கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் பலதரப்பட்ட பாத்திரங்களுக்கு பொருத்தமாக நடிகர் திலகம் திகழ்ந்தார் எனில், நகைச்சுவை உலகில் அத்தகைய பாத்திரத்திற்கு ஏற்றவராக திகழும் ஒரே நகைச்சுவை கலைஞன் வடிவேலு மட்டுமே. அரசன் முதல் ஆண்டி வரை, கல்லூரி மாணவன் முதல் வெட்டியான் வரை என்று சகல வேடங்களுக்கும் பொருத்தமான ஒரே ஆள் இன்றைய உலகில் வடிவேலுதான். அவருடைய சேட்டைகள் (Body Language) மட்டுமே திரையில் தோன்றிய உடனே குபீர் சிரிப்பையும் மக்களிடத்தில் ஒரு எதிர்ப்பார்ப்பையும் தோற்றுவிப்பதாய் அமைந்து விடுகின்றன. அவர் ஏற்ற இறக்கத்துடன் வசனங்களை பொழியும் பாணியே தனி. அதிலும் மனமொழி (உதட்டசைவின்றி பின்புலமாக ஒலிப்பது) மற்றும் முனகல் தனி ரகம். 

ஆனால் அந்தோ பரிதாபம்! சுமார் ஒரு ஆண்டு காலமாகிறது, வடிவேலுவின் புதிய படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவரை கிட்டத்தட்ட ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். அவர் செய்த தவறு கடந்த தேர்தலில் விஜயகாந்த் அவர்களை விமரிசித்து பிரச்சாரம் செய்தது மற்றும் அவரை எதிர்த்தது. இதனால் வடிவேலுவிற்கு புதிய படங்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். அவருடைய வருமானம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதைவிட மிகப்பெரிய இழப்பு தமிழர்களுக்கும், தமிழ் கலைத்துறைக்கும்தான். அவர் விட்டுச்சென்ற இடம் இன்னும் நிரப்பப்படாமலேயே இருக்கிறது. அவருக்கு மாற்றாக எண்ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் திணிக்கும் கலைஞர்கள் சம்பளத்தை வேண்டுமானால் கூட்டிக்கொள்ளலாம். ஏதோ எழுதியதை திரையில் வாந்தி எடுத்துவிட்டு செல்லலாம். ஆனால் அவர்கள் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை மறந்து விடக்கொடாது. தமிழக திரைத்துறையில் ஒரு ஆண்டு என்பது மிகப்பெரிய இடைவெளி. அந்த நேரத்தில் போட்டியாளர்கள் நுழைந்து காணாமல் செய்து விடுவார்கள். இருப்பினும் தமிழக ரசிகர்கள் வடிவேலுவை இன்னும் மறந்த பாடில்லை. இதற்கு இன்றைய தொலைக்காட்சிகளே சான்று. நகைச்சுவை தொலைக்காட்சிகள் மட்டும் அல்லாது பிற தொலைக்காட்சிகளும் வடிவேலுவின் நகைச்சுவை துணுக்குகளை ஒளிப்பரப்பாத நாளில்லை. அவர் எப்போதோ நடித்து வெளிவந்து, நாமும் பலதடவை பார்த்து முடித்த காட்சிகளையே அவர்கள் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள்  . அதன் பின்னர் எத்தனயோ புதிய திரைப்படங்கள் வெளிவந்து விட்டன. ஆயினும் அவற்றை விட வடிவேலுவை காட்டுவதிலேயே அவர்களும் பிரியப்படுகிறார்கள். ரசிகர்களும் இது ஏற்கெனவே பார்த்தாகிவிட்ட காட்சி ஆயிற்றே என்று ஒதுக்க வில்லை. அவற்றையே திரும்ப திரும்ப காண்பதில் ஆர்வம் கொள்கிறார்கள். 'சினேக் பாபு' வாகட்டும், அல்லது இன்ன பிற காட்சிகளாகட்டும் அவற்றில் ரசிகர்களுக்கு சலிப்பு இன்னமும் ஏற்படவில்லை. ஆகவே அந்த இடம் இன்னமும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. 

வடிவேலுவிற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும், தமிழ் கலைத்துறைக்கும் ஏற்பட்டிருக்கிற இழப்பு. இன்றைய அரசியல் மற்றும் கலைத்துறையினர் தாமாக முன்வந்து வடிவேலுவிற்கு மீண்டும் காட்சிகள் வழங்க இந்த நகைச்சுவை உணர்வு மேம்படவும், மேலோங்கி தழைக்கவும் வகை செய்ய வேண்டும்.