Wednesday, October 19, 2011

நல்ல பெயரை வாங்க வேண்டும்!

இந்த உலகில் நாகரீகம் தோன்றிய காலம் முதல் மனிதனுக்கு பிடித்தமான பொருட்களில் இடம் பெறுவது அவனுடைய பெயர்தான். ஒருவருக்கு பெயரை விட மிகவும் பிடித்தமான பொருள் ஒன்று இருக்க முடியாது. நாம் புதிய பேனா வாங்கும் பொழுது கிறுக்கி பார்ப்பது பெயரைத்தான். பழங்கால மண்டபங்கள், கோயில்கள், கற்பாறைகள், உத்தரங்கள், மரங்கள் என்று எங்கே பார்த்தாலும் யாரோ ஒருவர் தன்னுடைய பெயரை செதுக்கி வைத்திருப்பார். அந்த அளவிற்கு வசீகரமும் ஈடுபாடும் உடையது பெயர். ஒருவரின் பெயரை சரியாக உச்சரிக்க விட்டாலோ, தவறாக எழுதினாலோ நாம் ஒவ்வொருவரும் மிகுந்த வருத்தம் கொள்கிறோம். நம்முடைய முதல் எழுத்தை தவறி எழுதிவிட்டால் கூட நமக்கு ஆத்திரம் வருகிறது. நம்மை விட வயதிலோ, அனுபவத்திலோ, ஆற்றலிலோ, பதவியிலோ, பொருளாதாரத்திலோ எளியவர்கள் நம்முடைய பெயரை சொல்லி அழைத்தால் கூட நாம் அதை அவமரியாதையாக கொள்கிறோம். நம் பெயரை காலங்காலத்துக்கும் நிலை நிறுத்த நம் குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிசுகள் கூட பெயரன் என்றே அழைக்கப்படுகிறார்கள். இந்த அளவிற்கு நம்முடைய வாழ்வுடன் பின்னி பிணைந்தது நம்முடைய பெயர்.  அந்த பெயரை நாம் எப்படி கையாள்கிறோம் எப்படி அவை இருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு அலசல். 

பொதுவாக தமிழர் மரபாவது பெயரை குறிப்பிடும் பொழுது சொந்த ஊரையும்  சேர்த்து கூறுவதுதான். சீத்தலை சாத்தனார், மோசி கீரனார், இளையான்குடி மாறனார், சேரமான் இரும்பொறை என்று பல பெயர்களை குறிப்பிடலாம். அதன் பின்னர் ஊருடன் தந்தையின் பெயரையும் சேர்த்து இன்னார் மகன் இன்னார் என்று அடையாளம் காணப்பட்டன. அதன் பின்னர் குடும்ப பெயர் என்று குறிப்பிடப்பட்டு இன்றைய ஜாதிகளையும் சேர்த்து குறிப்பிட்டார்கள். இப்படி பலவேறு மாற்றங்களை கண்ட பெயர்கள் இன்று பெயருக்கு பின்னர் தந்தையாரின் முதல் எழுத்தை மட்டும் சுமந்து வரும் அளவிற்கு சுருங்கி விட்டது. இந்த பெயர் கூட இன்று படும் பாட்டை பார்த்தால் கண்ணீர்தான் வருகிறது. 

நம் தமிழ்நாட்டில் முதல் பெயர், இடைப்பெயர், கடைசிப்பெயர் என்று எதுவும் இல்லை. J. ஜெயலலிதா அல்லது ஜெயலலிதா J, என்று மட்டுமே குறிப்பிடுவார்கள். இதில் முதல் இடை கடை என்று கோடிட்டு காட்ட மாட்டார்கள். ஆனால் அதையும் வடநாட்டவரோ அல்லது முதல் பெயர் கடைசி பெயர் என்று குறிப்பிடும் வகையை சார்ந்தவரோ எப்படியெல்லாம் கொள்கிறார்கள் பாருங்கள். R. அன்புமணி (அதாவது ராமதாஸ் மகன் அன்புமணி) என்கிற பெயரை வடநாட்டவர்கள் கொன்று போட்டார்கள். நமக்கு ராமதாஸ் வேறு அன்புமணி வேறு என்று தெரியும். ஆனால் அவர்களோ அன்புமணி ராமதாஸ் என்று அன்புமணியின் பெயரை விரித்து, காலப்போக்கில் அதையே A. ராமதாஸ் என்று அழைத்தார்கள். மத்திய அமைச்சர் திரு. ராமதாஸ் என்று சொல்லிக்கொண்டார்கள். நமக்கு ஒரே குழப்பம். ராமதாஸ் கட்சி தலைவர்தானே. அவர் மகன் அன்புமணிதானே மத்திய அமைச்சர். இவர்கள் என்ன ராமதாசை மத்திய அமைச்சர் என்று சொல்கிறார்கள் என்று சில காலம் குழம்பி கொண்டிருந்தோம். ஆனால் முன்னாள் ஜனாதிபதி R. வெங்கடராமனை, ராமசாமி வெங்கடராமன் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்படி தந்தையாரின் பெயர் முன்னாள் போடா வேண்டுமா பின்னால் போடவேண்டுமா என்று அவர்களுக்கும் புரியவில்லை, அதை வேடிக்கை பார்த்த நமக்கும் தட்டி கேட்க துணிவும் இல்லை. மாறனின் மகன் தயாநிதியை நாம் M. தயாநிதி என்று மட்டுமே சொல்லுவோம். அவர்களோ தயாநிதி மாறன் என்று சொல்லுகிறார்கள். அவரை அழைக்கும் பொழுது திரு. மாறன் என்கிறார்கள். திரு. தயாநிதி என்றுதானே சொல்ல வேண்டும். திரு. மாறன் என்றால் அவரது தந்தை அல்லவா வருவார்? இப்படிப்பட்ட குழப்பங்களுக்கு காரணம் அவர்கள் நம்முடைய பெயர்களையும் முதல் இடை கடை என்று பிரித்து எழுதி கூப்பிடுவதால்தான். அவர்களுக்கு சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்பதை S. R. டெண்டுல்கர் என்று எழுதி பழக்கம். சச்சின் என்று அழைத்து பழக்கம். இப்படிப்பட்ட பெயர்களுடன் நம்முடைய பெயரையும் ஒப்புமை படுத்தி நம்மையும் பாடாய் படுத்துகிறார்கள்.

ஆகவே தமிழர்கள் பெயரை தனிரகமாக கொண்டு நாம் எப்படி வழங்குகிறோமோ அப்படியே பிறமக்களும் அழைக்கும்படி நாம் பார்த்துக்கொள்ளவேண்டும். அவர்கள் முதல் பெயர் கடைசி பெயர் என்று பிரித்து எழுத சொன்னால் முதலில் நம்முடைய பெயரையும் கடைசியில் தந்தையார் (அல்லது தாயார்) பெயரையும் இடையில் இருந்தால் ஊர் பெயரையும் சேர்த்து சொல்வதே சரியாக இருக்கும். M. G. R. என்றே பிரபலமான திரு. மருதூர் கோபாலன் ராமச்சந்திரனை, ராமச்சந்திரன் மருதூர் கோபாலன் என்று எப்படி எழுத முடியும். அப்படி எழுதிய பெயரை R. M. கோபாலன் என்று வேற்று நாட்டவர் அழைப்பார்களே! இப்படியேதான் அவருடைய தனித்தன்மை காணமல் போய்விடுமே. ஆகவே நாம் எப்படி எழுதுகிறோமோ அப்படியே வழங்க வேண்டும். நம்முடைய பெயரை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடம் கூடாது. உங்கள் உருவத்தையும் குணத்தையும் அல்லவா அது தாங்கி செல்கிறது. அதை ஏனோ தானோ என்று கையாள எப்படி மனம் வரும்?  
   

No comments:

Post a Comment